ஈரானில் நடைபெற்று வரும் அரசுக்கு எதிரான போராட்டங்களின் தாக்கம் காரணமாக, தெஹ்ரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவுகள் மீண்டும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பதற்ற நிலை அதிகரித்துள்ளதுடன், அந்தப் பகுதியில் அமெரிக்கா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
அமெரிக்கா–ஈரான் இடையிலான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், டிரம்ப் நிர்வாகம் இராணுவ நடவடிக்கையை பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனைத் தொடர்ந்து, கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவத் தளத்தில் பணியாற்றும் சில பணியாளர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க தூதரகம், அமெரிக்க குடிமக்களும் தூதரக ஊழியர்களும் “அதிக எச்சரிக்கையுடன்” செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
மேலும், பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு இராணுவ நிலையங்களுக்கும் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
ஈரானில் போராட்டக்காரர்கள் தூக்குத் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டால், அமெரிக்கா “மிகக் கடுமையான நடவடிக்கை” எடுக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று எச்சரிக்கை விடுத்தார்.
ஆனால், அந்த நடவடிக்கை எவ்வகையானது என்பது குறித்து அவர் விளக்கவில்லை.
அதேசமயம், ஈரான் அதிகாரிகளுடன் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சந்திப்புகளையும் ரத்து செய்ததாகவும் டிரம்ப் அறிவித்தார்.
இந்தப் பின்னணியில், தெஹ்ரான்–வாஷிங்டன் இடையிலான பதற்றத்தை குறைக்கும் முயற்சியில் பிராந்திய நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளிகளான சவூதி அரேபியா, கத்தார் மற்றும் ஓமான் ஆகிய மூன்று வளைகுடா அரபு நாடுகள், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கையைத் தடுக்க மறைமுக தூதரக முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எந்தவொரு இராணுவ பதற்றமும் முழு பிராந்தியத்தின் பாதுகாப்புக்கும் பொருளாதாரத்துக்கும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அவர் எச்சரித்தார்.
இதேவேளை, துருக்கியும் ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்து, பேச்சுவார்த்தை மேசைக்கு மீண்டும் திரும்ப முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால், அந்த பேச்சுவார்த்தைகளின் வேகம் மிக மெதுவாக இருப்பதாக பிராந்திய தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“தற்போது பேச்சுவார்த்தை குறித்து பேசப்படுகிறது. ஆனால் அதன் வேகம் மிக மெதுவாக உள்ளது; இந்நிலையில் அது தாமதமாகிவிடும் அபாயமும் உள்ளது,” என அந்த வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

