புதிய உலகளாவிய சவால்களை எதிர்கொள்ளும் சூழலில், பல ஆண்டுகளாக நீடித்த பதற்றத்திற்கு பின்னர், சீனா மற்றும் கனடா நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்த இரு நாடுகளின் தலைவர்களும் உறுதியளித்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை சீனாவுக்கு விஜயம் செய்த கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நடைபெற்ற சந்திப்பில், சீன அதிபர் ஷி ஜின்பிங், இருநாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்த தொடர்ந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
கடந்த ஆண்டு அக்டோபரில் தென் கொரியாவில் நடைபெற்ற பிராந்திய பொருளாதார மாநாட்டின் இடைநடுவில் இரு தலைவர்களும் முதன்முறையாக சந்தித்ததையடுத்து, ஒத்துழைப்பை மீட்டெடுக்கும் மற்றும் புதுப்பிக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“கடந்த ஆண்டு நடைபெற்ற எங்களின் சந்திப்பு, சீனா–கனடா உறவுகள் முனேற்றம் நோக்கி நகர்வதற்கான புதிய அத்தியாயத்தைத் தொடங்கியது என்று கூறலாம் என ஷி ஜின்பிங் தெரிவித்தார்.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவுக்கு விஜயம் செய்த முதல் கனடா பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற மார்க் கார்னி, மேம்பட்ட உறவுகள் உலகளாவிய நிர்வாக அமைப்பை வலுப்படுத்த உதவும் என கூறினார்.
அந்த அமைப்பு தற்போது “கடுமையான அழுத்தத்தின் கீழ்” இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பீஜிங்கில் உள்ள மக்களின் மகா மண்டபத்தில் (Great Hall of the People) உரையாற்றிய கார்னி, “கடந்த காலத்தில் இந்த உறவு கொண்டிருந்த சிறந்த அம்சங்களை அடிப்படையாக கொண்டு, புதிய உலக யதார்த்தங்களுக்கு ஏற்ப ஒரு புதிய உறவை நாம் ஒன்றிணைந்து உருவாக்க முடியும்” என ஷி ஜின்பிங்கிடம் தெரிவித்தார்.
ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பே புதிய மூலோபாய கூட்டாண்மையின் அடித்தளமாக இருக்கும் என்றும், விவசாயம், ஆற்றல், நிதி ஆகிய துறைகளில் உடனடி முன்னேற்றம் காண முடியும் என்றும் கார்னி கூறினார்.
“புதிய யதார்த்தங்கள்” என்ற குறிப்புகள், பெரும்பாலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் “அமெரிக்கா முதலில்” என்ற கொள்கையைக் குறிக்கின்றன. அவர் விதித்த சுங்க வரிகள், கனடா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளின் பொருளாதாரங்களையும் பாதித்துள்ளன.
பீஜிங்கில் பல முக்கிய சீன நிறுவனங்களுடன் சந்தித்துள்ள கார்னி, தனது பயணத்திற்கு முன்னர், “உலகளாவிய வர்த்தக குழப்பம் நிலவும் இந்த காலத்தில், அமெரிக்காவை குறைவாக சார்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவதில் எங்கள் அரசு கவனம் செலுத்துகிறது” என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சீனா–கனடா இடையிலான சுங்க வரிகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இது இரு நாடுகளின் உறவுகளில் இன்னும் முக்கிய சிக்கலாகவே இருந்து வருகிறது.

