கிரீன்லாந்தை அமெரிக்கா கொள்வனவு செய்யும் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், பல ஐரோப்பிய நாடுகளுக்கு புதிய சுங்க வரிகளை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
டென்மார்க்கின் ஆட்சிக்குட்பட்ட ஆர்க்டிக் பகுதியான கிரீன்லாந்தை அமெரிக்கா கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் என்ற தனது நீண்டகால முயற்சியை இது மேலும் தீவிரப்படுத்துகிறது.
எதிர்வரும் பெப்ரவரி 1 முதல் டென்மார்க், நோர்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய இராச்சியம், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வரும் “அனைத்து பொருட்களுக்கும்” 10% சுங்கவரி விதிக்கப்படும். ஜூன் 1 முதல் அது 25% ஆக உயர்த்தப்படும். கிரீன்லாந்து தொடர்பான ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரிகள் அமலில் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
பல நூற்றாண்டுகளாக சுங்க வரி விதிக்காமல் டென்மார்க்கையும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளையும் அமெரிக்கா ஆதரித்துள்ளது.
இப்போது டென்மார்க் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது – உலக அமைதி கேள்விக்குறியாக உள்ளது என டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
எந்த வகை பொருட்களுக்கு எவ்வாறு இந்த சுங்க வரிகள் விதிக்கப்படும், அல்லது ஏற்கனவே உள்ள வரிகளுக்கு மேலாகவா 10% விதிக்கப்படுமா என்பது குறித்து டிரம்ப் தெளிவுபடுத்தவில்லை.
இதுகுறித்து வெள்ளை மாளிகையிடம் கருத்து கேட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
டிரம்பின் இந்த எச்சரிக்கை ஐரோப்பிய தலைவர்களிடையே கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது “அதிர்ச்சி அளிப்பதாக” இருப்பதாகவும், சமீபத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவுடன் நடந்த “நல்ல கலந்துரையாடலுக்குப்” பிறகு இப்படியான அறிவிப்பு வந்துள்ளதாகவும் டென்மார்க் வெளிவிவகார அமைச்சர் லார்ஸ் லொக்கே ராஸ்முசன், கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய சட்டமன்ற உறுப்பினர்கள், கடந்த ஆண்டு அமெரிக்காவுடன் எட்டப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தை இடைநிறுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
கடந்த 150 ஆண்டுகளாகவே அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற முயற்சித்து வருவதாக டிரம்ப் கூறினார். நவீன ஆயுத முறைமைகள், ஏவுகணை பாதுகாப்புத் திட்டங்கள் (Golden Dome உள்ளிட்டவை) காரணமாக, அந்தப் பகுதியின் கட்டுப்பாடு மிக முக்கியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

