ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவை கொலை செய்த நபருக்கு ஜப்பான் நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் பிரசார நிகழ்வின்போது ஷின்சோ அபேவை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக ஒப்புக்கொண்ட 45 வயதுடைய டெட்சுயா யமகாமி மீது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கொலை சம்பவம் ஜப்பான் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த வழக்கில் யமகாமிக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் கோரியிருந்தனர்.
போருக்குப் பிந்தைய ஜப்பான் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத குற்றமாக இது அமைந்துள்ளதாகவும், சமூகத்தில் மிகக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர்.
இதற்கு மாறாக, யமகாமியின் சட்டத்தரணிகள் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை மட்டுமே வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.
எனினும், வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு நீதிமன்றம் ஆயுள் சிறைத் தண்டனையை விதித்துள்ளது.

