ஸ்பெயினின் பார்சிலோனா நகரத்திற்கு அருகிலுள்ள ஜெலிடா (Gelida) பகுதியில் செவ்வாய்க்கிழமை பயணிகள் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில், ரயில் சாரதி ஒருவர் உயிரிழந்ததுடன், 37 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து நடைபெறுவதற்கு வெறும் இரண்டு நாட்களுக்கு முன்னர், ஸ்பெயினின் தெற்குப் பகுதியில் உள்ள கோர்டோபா மாகாணத்தின் அடமூஸ் (Adamuz) அருகே இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செவ்வாய்க்கிழமை நடந்த இந்த விபத்து, தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தும் R4 வழித்தடத்தில் இயக்கப்பட்ட பயணிகள் ரயிலில் ஏற்பட்டது.
ஜெலிடா மற்றும் சாந்த் சாதுர்னி டி’அனோயா (Sant Sadurní d’Anoia) நகரங்களுக்கு இடையில் பயணித்துக் கொண்டிருந்தபோது இந்த ரயில் தடம் புரண்டது.
கனமழை காரணமாக ஒரு தாங்குச் சுவர் இடிந்து ரயில் பாதையில் விழுந்ததையடுத்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உள்ளூர் நேரப்படி இரவு 10.00 மணியளவில் நிகழ்ந்துள்ளது. விபத்து தொடர்பாக அவசர சேவைகளுக்கு 28 அழைப்புகள் கிடைத்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு மருத்துவ அவசர சேவை அமைப்பின் (SEM) 20 ஆம்புலன்ஸ்களும், தீயணைப்பு துறையின் 38 அலகுகளும் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டலோனியா மண்டல தீயணைப்பு துறை, பாதுகாப்பு வலயம் அமைத்து, தாங்குச் சுவர் மற்றும் ரயிலை உறுதிப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், “அதிக ஆபத்து பகுதியாக” அறிவிக்கப்பட்ட இடத்திலிருந்து காயமடைந்தவர்கள் வெளியேற்றப்பட்டு, அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.
ரயிலுக்குள் சிக்கியிருந்த ஒருவரை சிறப்பு முயற்சியுடன் மீட்க வேண்டியிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

