இணைய வழி குற்றங்களைத் தடுக்கும் மற்றும் விசாரிக்கும் நோக்கில் புதிய சிறப்பு பொலிஸ் பிரிவொன்றை நிறுவ அரசு தீர்மானித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
பெப்ரவரி 6ஆம் தேதி வியாழக்கிழமை பொல்பிட்டிய பொலிஸ் நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சைபர் தொடர்பான குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், தினசரி 23 முதல் 25 வரை இவ்வகை சம்பவங்கள் பதிவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த எண்ணிக்கை கவலைக்கிடமானதாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதனால் நவீன தொழில்நுட்ப வசதிகளும், சிறப்பு நிபுணத்துவ அறிவும் கொண்ட தனிப்பிரிவு ஒன்றை உருவாக்கி, சைபர் குற்றங்களை திறம்பட விசாரித்து தீர்வு காண வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்தினார்.
பொலிஸ் துறையை நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், புதிய தொழில்நுட்பங்களை படிப்படியாக அறிமுகப்படுத்தி, விசாரணை திறன்களை மேம்படுத்த சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை பொலிஸை உயர்ந்த தொழில்முறை, செயல்திறன் மிக்க மற்றும் ஊழலற்ற நிறுவனமாக மாற்றுவதே அரசின் நோக்கம் எனவும், அதனை அடைய தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.
மேலும், திறமைமிக்க அதிகாரிகள் சேவையில் முன்னேற உகந்த சூழல் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், தவறான நடத்தை மேற்கொள்ளும் அதிகாரிகளை நீக்குவதற்கான நடைமுறைகளும் அமலில் உள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

