எப்ஸ்டீன் சர்ச்சையைச் சுற்றியுள்ள புதிய வெளிப்பாடுகள் தொடர்பாக, தனது சகோதரர் இளவரசர் ஆண்ட்ரூ குறித்து வெளியான குற்றச்சாட்டுகள் மீது காவல்துறைக்கு ஆதரவு அளிக்க பக்கிங்ஹாம் அரண்மனை தயாராக இருப்பதாக மன்னர் சார்ல்ஸ் முதன்முறையாக கருத்து தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூவின் நடத்தை தொடர்பாக தொடர்ந்து வெளியாகி வரும் குற்றச்சாட்டுகள் குறித்து மன்னர் தனது ஆழ்ந்த கவலைகளை வார்த்தைகளிலும், முன்னெப்போதும் இல்லாத நடவடிக்கைகளின் மூலமும் தெளிவுபடுத்தியுள்ளார்,” என அரண்மனை பேச்சாளர் தெரிவித்தார்.
குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது மவுண்ட்பாட்டன்–வின்சர் அவர்களுக்கே உரியது. இருப்பினும், தாம்ஸ் வேலி காவல்துறை எங்களை அணுகினால், எதிர்பார்க்கப்படும் வகையில் முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்கத் தயாராக உள்ளோம் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், ஆண்ட்ரூ மீது பொது அலுவலகத்தில் தவறான நடத்தை மற்றும் அதிகாரப்பூர்வ ரகசியங்களை மீறியதாக குற்றஞ்சாட்டி, குடியரசு ஆதரவு அமைப்பு ‘ரிபப்ளிக்’ அளித்த புகாரை விசாரிக்க தகுந்த ஆதாரங்கள் உள்ளதா என்பதை மதிப்பாய்வு செய்து வருவதாக தாம்ஸ் வேலி காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்ற மின்னஞ்சல்கள், ஆண்ட்ரூ சிங்கப்பூர், ஹொங்கொங், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணங்களின் அறிக்கைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்த ரகசிய தகவல்களை எப்ஸ்டீனுடன் பகிர்ந்திருக்கலாம் எனக் காட்டுகின்றன.
2010 நவம்பர் 30ஆம் திகதி, தனது சிறப்பு ஆலோசகர் அமித் பட்டேல் அனுப்பிய அதிகாரப்பூர்வ பயண அறிக்கைகளை பெற்ற ஐந்து நிமிடங்களுக்குள் அவற்றை எப்ஸ்டீனுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
மேலும், “ரகசியம்” எனக் குறிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் முதலீட்டு வாய்ப்புகள் பற்றிய தகவல்களும் 2010 டிசம்பர் 24ஆம் திகதி எப்ஸ்டீனுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலின்படி, வர்த்தக தூதர்கள் தங்கள் அதிகாரப்பூர்வ பயணங்களின் போது பெறும் நுணுக்கமான வாணிக மற்றும் அரசியல் தகவல்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய கடமை உடையவர்கள்.
பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், “மன்னரும் மகாராணியும் அனைத்து வகையான துஷ்பிரயோகங்களின் பாதிப்புக்குள்ளானவர்களுடன் மனதளவில் இணைந்துள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கிளிதெரோ பயணத்தின் போது, “ஆண்ட்ரூ பற்றி எவ்வளவு காலமாக தெரிந்தது?” எனக் கேள்வி எழுப்பிய ஒருவரை கூட்டம் எதிர்த்து சாடியது.
மேலும், எப்ஸ்டீன் தொடர்பான சமீபத்திய வெளிப்பாடுகள் குறித்து “ஆழ்ந்த கவலை” இருப்பதாக இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேத்ரின் சார்பில் கென்சிங்டன் அரண்மனை தெரிவித்துள்ளது. “எங்களின் கவனம் பாதிக்கப்பட்டவர்கள்மீதே உள்ளது,” என பேச்சாளர் குறிப்பிட்டார்.
எப்ஸ்டீன் தொடர்பான மேலும் 30 இலட்சம் ஆவணங்கள் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஆண்ட்ரூ மீது அழுத்தம் அதிகரித்துள்ளது. இரண்டாவது பெண் ஒருவரை பாலியல் சந்திப்பிற்காக இங்கிலாந்துக்கு அனுப்பியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

