அமெரிக்காவின் எண்ணெய் தடையின் பின்னணியில் கியூபாவில் எரிசக்தி நெருக்கடி மோசமடைந்துள்ள நிலையில், அங்கு தங்கியுள்ள கனடியர்கள் தாய்நாட்டிற்கு திரும்புவதற்கான விமானங்களை காத்திருக்கின்றனர்.
ஏர் கனடா (Air Canada) மற்றும் வெஸ்ட்ஜெட் (WestJet) உள்ளிட்ட முக்கிய கனடிய விமான சேவைகள், கியூபாவுக்கு செல்லும் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இருப்பினும், மூன்று முக்கிய விமான நிறுவனங்களும் கியூபாவில் உள்ள பயணிகளை கனடாவிற்கு மீண்டும் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளன.
கால்கரி தலைமையகமாகக் கொண்ட வெஸ்ட்ஜெட், தனது குளிர்கால சேவைகளை கட்டுப்படுத்தும் முடிவு வெஸ்ட்ஜெட், சன்விங் வெக்கேஷன்ஸ் (Sunwing Vacations), வெஸ்ட்ஜெட் வெக்கேஷன்ஸ் மற்றும் Vacances WestJet Quebec ஆகிய சேவைகளையும் பாதிக்கும் என தெரிவித்துள்ளது.
ஏர் கனடா, கியூபா விமான நிலையங்களில் விமான எரிபொருள் விநியோகம் நம்பகமற்றதாக இருப்பதாக அரசாங்கங்கள் வெளியிட்டுள்ள எச்சரிக்கைகளைத் தொடர்ந்து சேவைகளை ரத்து செய்ததாக விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம், கியூபாவுக்கு பாரம்பரிய எரிபொருள் ஆதாரங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்து, அந்த தீவு நாட்டிற்கு அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம் கொடுக்க முயற்சித்து வருகிறது.
ஃபுளோரிடா கடற்கரைக்கு அருகிலுள்ள கியூபா, பல ஆண்டுகளாக அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளின் கீழ் இருந்து வருகிறது. தற்போதைய எண்ணெய் விநியோகத் தடைகள், நாட்டின் மின்சாரம் மற்றும் போக்குவரத்து துறைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.
இதனால் சுற்றுலா துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கனடியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தாய்நாட்டிற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
விமான சேவைகள் மீண்டும் எப்போது வழமைக்கு திரும்பும் என்பது குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை.

